Monday, October 14, 2019

கனவுகள்

மானிடர்கள் பூவுலகில் பிறந்துவந்து - என்றும்

மதிவளரும் பான்மையிலே வாழ்ந்திடணும்

பிணிகளிலாப் பெருவாழ்வு பெற்றிடணும் – பெரியோர்கள்

பேசியநல் பாதைகளிலே சென்றிடணும்

தனித்தமிழை எல்லோரும் கற்பதோடு – அதனைத்

தரணியிலே தழைத்திடவே செய்திடணும்

தேனீக்கள் போலநாமும் ஒன்றுசேர்ந்து – நல்ல

திருநாடாய் இவ்வுலகை மாற்றிடணும்



சமத்துமச முதாயமென மாற்றிடவே – நாம்

சாதிமதப் பூசல்களை மாற்றிடணும்

பூமியிலே பொல்லாத மாந்தரையும் – நல்ல

புனிதமிகு மனிதராக மாற்றிடணும்

அமிழ்தமென கிடைத்ததிந்தப் பிறவியிலே – அந்த

ஆண்டவனின் அருளைநாம் பெற்றிடணும்

சாமியெனப் பொய்வேடம் போடுகின்ற – அந்த

சண்டாளர் கூட்டத்தை அழித்திடணும்.



ஏழைகளே இல்லாமல் செய்துவிட்டு – நல்ல

ஏற்றமிகு நாடாக ஆக்கிடணும்

கோழைகளாய்த் திரிகின்ற மானுடரை – நல்ல

கொள்கையுள்ள மாந்தர்களாய் மாற்றிடணும்

மழையில்லா மாநிலத்தை மாற்றிடணும் – நல்ல

மாற்றங்கள் பூவுலகம் கண்டிடணும்

கூழுக்கு பஞ்சமெனும் நிலைமாற்றி – எங்கும்

குவலயத்தில் வளம்நிலவச் செய்திடணும்



இளம்வயதில் குழந்தைகளைக் கசக்கிடாமல் – அவர்கள்

இன்பத்துடன் கற்றிடவே செய்திடணும்

மலைபோல குடும்பசுமை ஏற்றிடமால் – நல்ல

மணம்வீசும் கல்விப்பயில் வளர்த்திடணும்

காலத்தோடு கல்விதனைக் கற்றிடணும் – இங்கு

கல்லாமை இல்லையெனச் செய்திடணும்

வேலவனின் அருளாலே இவைகளெல்லாம் – நல்ல

வெள்ளிதரும் மாற்றமாக ஆக்கிடணும்.