Saturday, December 14, 2019

கீழ்க்கணக்கு நூல்களில் யாப்பியல்

கீழ்க்கணக்கு நூல்களில் யாப்பியல்
முன்னுரை
யாப்பியல் ஆய்வு என்பது மரபுப் பாக்களின்  தன்மைகளை ஆராய்தலாகும். இவ்வாய்வு ஆராயப்படும் நூலில் அமைந்துள்ள பாக்களின் இயல்புகளை அப்பாக்களுக்கான இலக்கணங்களோடு ஒப்பிட்டு ஆராயப்படும். கீழ்க்கணக்கு நூல்களில் நிகழ்த்தப்படும் இவ்வாய்வும் அந்நூல்களில் அமைந்துள்ள பாக்களை ஆராயும் நோக்கில் நிகழ்த்தப்படுகிறது. இனி அவற்றைக் காண்போம்.
கீழ்க்கணக்கு நூல்களின் அடியளவு
கீழ்க்கணக்கு என்பது நான்கடிக்கு கீழ் உள்ள பாடல்களைக் குறிக்கும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பன நான்கடிக்குக் கீழ் உள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்களின் தொகுப்பாகும். வெண்பா யாப்பில் அமைந்த இவ்விலக்கியங்களில் ஒரு சில பாடல்கள் (பஃறொடை வெண்பா) நான்கடிகளை மிக்கும் அமைகின்றன.
கீழ்க்கணக்கு நூல்களின் பொருண்மை
கீழ்க்கணக்கில் அமைந்துள்ள பதிணெட்டு நூல்களில்,  அறம், பொருள், இன்பம் என்ற பொருண்மையில் அமைந்து அறக்கருத்துகளைக் கூறுவனவாக, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி  என்ற பதினொன்றும், அகப்பொருள் பற்றியதான கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது,  கைந்நிலை என்ற ஐந்தும், புறப்பொருள் பற்றியதான களவழி நாற்பது என்ற ஒன்றும் அமைகின்றன.
கீழ்க்கணக்கு நூல்களின் யாப்புவகை
தொல்காப்பியரால்(தொ.செ.நூ.118) குறுவெண்பாட்டு, நெடுவெண்பாட்டு எனக் குறிப்பிடப்படும் வெண்பாவே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வடிவங்களாக அமைவதை அதன் இலக்கியங்கள் காட்டுகின்றன. அவற்றிலும் குறிப்பாக, குறள்வெண்பா, நேரிசை சிந்தியல் வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என வெண்பாவின் அனைத்து வகைகளும் இவ்விலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளன. மேலும் குறள்வெண்பாவின் இனமான குறள்வெண்செந்துறை முதுமொழிக் காஞ்சியில் பயின்று வந்துள்ளது.
குறள்வெண்பா
“இரண்டடியாய் முதலடி நாற்சீர்களையும் இரண்டாம் அடி முச்சீர்களையும் கொண்டு, ஈற்றுச்சீர் நாள், மலர் காசு, பிறப்பு” என்ற ஓரசைச்சீரில் ஏதேனும் ஒன்றினைப் பெற்றுவரும் குறள் வெண்பா யாப்பில் திருக்குறளில் 1330 பாக்களும், ஆசாரக்கோவையில் ஒரு பாடலும் என 1331 குறள்வெண்பாக்கள் கீழ்க்கணக்கு நூல்களில் காணக்கிடைக்கின்றன.
நேரிசை சிந்தியல் வெண்பா
“வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியாய், வரும் சிந்தியல் வெண்பாவில், இரண்டு(3,24) பாடல்கள் கிடைக்கின்றன. இப்பாடல்கள் ஆசாரக்கோவையில் அமைந்துள்ளன.
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் - தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்
மேற்கண்ட பாடல்கள், பல விகற்பத்தால் காய்ச்சீர்களை மிகுதியாகப் பெற்று நேரிசை சிந்தியல் வெண்பாவில் அமைந்திருப்பினும் இவற்றில் வரும் தனிச்சொற்கள் இரண்டாம் அடிக்கு ஏற்ற எதுகைகளைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிசை சிந்தியல் வெண்பா
இப்பா அமைப்பில் ஆசாரக்கோவையில் 51 பாடல்கள் காணக்கிடைக்கின்றன. இப்பாடல்கள் காய்ச்சீர்களை மிகுதியாகப் பெற்றுப் பல விகற்பங்களில் உள்ளன. இவை தவிர ஏனைய கீழ்க்கணக்கு நூல்களில் இவ்வகை யாப்பு காணப்பெறவில்லை.(சோ.ந.க 608)
தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு
குறை எனினும் கொள்ளார் இரந்து.    ஆச்சாரக் கோவை 12
நேரிசை வெண்பா
நான்கடியாய் தனிச்சொல் பெற்றுவரும் இப்பா அமைப்பில், நாலடியார்(309), நான்மணிக்கடிகை (52), கார் நாற்பது(13), களவழி நாற்பது(10), திரிகடுகம்(50), ஆசாரகோவை(6), சிறுபஞ்சமூலம்(97), ஏலாதி(81), திணைமொழி ஐம்பது(3), ஐந்திணை ஐம்பது(35), ஐந்திணை எழுபது(27), திணைமாலை நூற்றைம்பது(150), கைந்நிலை(9) பழமொழி நானூறு(225) ஆகிய இலக்கியங்களில் மொத்தம் 1067 பாடல்கள் கிடைக்கின்றன.
சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை
உதணால் கடிந்தான் உளன்.
இன்னிசை வெண்பா
நாலடியார்(92), நான்மணிக்கடிகை(48), இனியவை நாற்பது(40), இன்னா நாற்பது(41), கார் நாற்பது(27), களவழி நாற்பது(12), திரிகடுகம்(51), ஆசாரகோவை32, சிறுபஞ்சமூலம்(1), ஏலாதி(1), திணைமொழி ஐம்பது(47), ஐந்திணை ஐம்பது(16), ஐந்திணை எழுபது( 40), திணைமாலை நூற்றைம்பது(4), கைந்நிலை(38), பழமொழி நானூறு(176) என மொத்தம் 666 பாடல்கள் இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.
பஃறொடை வெண்பா
களவழி நாற்பது(19) ஆசாரகோவை(8), நான்மணிக்கடிகை(3), இனியவை நாற்பது(1) என நான்கு இலக்கியங்களில் 31 பஃறொடை வெண்பாக்கள் உள்ளன. இப்பாடல்கள் ஐந்தடி மற்றும் ஆறடிகளால் அமைந்துள்ளன.
நன்றி அறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல் இனத்தாரோடு நட்டல் - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. (ஆச்சாரக் கோவை 1)
ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி,
பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்,
கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி,
இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும் - புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.       - (களவழி நாற்பது 28)
மேற்கண்ட இரண்டு பஃறொடை வெண்பாக்களும் ஐந்தடி, ஆறடிகளைப் பெற்று பல விகற்பத்தால் அமைந்துள்ளன.
குறள்வெண் செந்துறை
இரண்டடியால் அளவொத்து வரும் செந்துறை அமைப்பில் 100 பாடல்கள் கிடைக்கின்றன. இவை முதுமொழிக் காஞ்சியில் அமைந்துள்ளன.
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை(1)
பெருமை உடையதன் அருமை பழியார்
அருமை யுடையதன் பெருமை பழியார்
இப்பாடல்களில் இயற்சீர்கள் மிகுதியாகவும் காய்ச்சீர் அரிதான நிலையிலும் பயின்று வந்துள்ளதைக் காணமுடிகிறது.
ஒரு விகற்ப வெண்பாக்கள்
யாப்பிலக்க ஆசிரியர்களால் ஒருவிற்பத்தானும் பல விகற்பத்தானும் பாடல்கல் அமையலாம் எனக் குறிப்பிட்டிருப்பினும் ஒரு விகற்பத்தால் அமைவதே சிறப்பு எனக் கூறப்படுகிறது. அவ்வகையில்,
உடையார்முன் இல்லால்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்(395)
மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய்
எண்கிடந்த நாளான் இகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த
தன்மை யொழியத் தரள மூலையினாள்
மென்மைசெய் திட்டாள் மிக.    திணைமாலை நூற்றைம்பது 146
மேற்கண்ட பாடல்கள் ஒருவிகற்பத்தில் அமைந்துள்ளதைக் காணலாம்.
பல விகற்ப வெண்பாக்கள்
கீழ்க்கணக்கு நூல்களில் அமைந்துள்ள மிகுதியானப் பாடல்கள் பல விகற்பத்தாலேயே அமைகின்றன.
உறங்குவது போலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)
சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு.   ஏலாதி 1

ஏந்திசைச்  செப்பல் வெண்பாக்கள்
பாடல் முழுவதும் வெண்சீர் வெண்டளையால் அமைவது ஏந்திசைச் செப்பலாகும்.
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாத்துணையும் கல்லாத வாறு   குறள் 397
மேற்கண்ட பாடல்கள் ஏந்திசைச் செப்பலில் அமைந்துள்ளதைக் காணலாம்.
தூங்கிசைச் செப்பல் வெண்பாக்கள்
பாடல் முழுவதும் இயற்சீர் வெண்டளையால் அமைவது தூங்கிசைச் செப்பலாகும்.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது(குறள் 811)
கல்லில் பிறக்கும், கதிர்மணி; காதலி
சொல்லில் பிறக்கும், உயர்மதம் - மெல்லென்
அருளில் பிறக்கும், அறநெறி, எல்லாம்
பொருளில் பிறந்துவிடும்.         (நான்மணிக்கடிகை 5)
மேற்கண்ட பாடல்கள் தூங்கிசைச் செப்பலில் அமைந்துள்ளதைக் காணலாம்.
ஒழுகிசைச் செப்பல் வெண்பாக்கள்
இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் விரவி வருவது ஒழுகிசைச்  செப்பலாகும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள் 392)
நிலத்துக்கு அணிஎன்ப, நெல்லும் கரும்பும்;
குளத்துக்கு அணிஎன்ப தாமரை; பெண்மை
நலத்துக்கு அணிஎன்ப, நாணம்; தனக்கணி
தான்செல் உலகத்து அறம்.       (நான்மணிக்கடிகை 9)
மேற்கண்ட பாடல்கள் ஒழுகிசைச் செப்பலில் அமைந்துள்ளதைக் காணலாம்.
கீழ்க்கணக்கு நூல்கள்
குறள் வெண்பா

செந்துறை
இன்னிசை சிந்தியல்
நேரிசை சிந்தியல்
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
மொத்தம்
1
திருக்குறள்
1330






1330
2
நாலடியார்




309
92

401
3
நான்மணிக்கடிகை




52
48
3
103
4
இனியவை நாற்பது





40
1
41
5
இன்னா நாற்பது





41

41
6
கார் நாற்பது




13
27

40
7
களவழி நாற்பது




10
12
19
41
8
திரிகடுகம்




50
51

101
9
ஆசாரகோவை
1

51
2
6
32
8
100
10
சிறுபஞ்சமூலம்




97
1

98
11
ஏலாதி




81
1

82
12
திணைமொழி ஐம்பது




3
47

50
13
ஐந்திணை ஐம்பது




35
16

51
14
ஐந்திணை எழுபது




27
40

67
15
திணைமாலை நூற்றைம்பது




150
4

154
16
கைந்நிலை




9
38

47
17
பழமொழி நானூறு




225
176

401
18
முதுமொழிக் காஞ்சி

100





100
மொத்தம்
1331
100
51
2
1067
666
31
3248
முடிவுரை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் குறள் வெண்பா, நேரிசை சிந்தியல், இன்னிசை சிந்தியல், நேரிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா என அனைத்து வெண்பா வகைகளும் ஆட்சி பெற்றுள்ளன. ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் ஏந்திசை, ஒழிகிசை, தூங்கிசை என அனைத்து செப்பல் ஓசையிலும் பாடல்கள் காணக்கிடைக்கின்றன.

Dr. G. HARIKRISHNAN
முனைவர் க. அரிகிருஷ்ணன்,
8, கிழக்குத் தெரு,
இரட்டணை அஞ்சல்
திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
9842036899
harigrettanai1977@gmail.com