Saturday, December 14, 2019

தொகைநிலைத் தொடர்

தொடர்
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்று பொருள் தருவது தொடர் எனப்படும்.  இதனைச் சொற்றொடர் என்றும் கூறுவர்.
தொடர் வகைகள்
இத்தொடர் இரண்டு வகைப்படும். அவை, தொகாநிலைத்தொடர், தொகைநிலைத் தொடர் என்பனவாகும்.
தொகா          -           மறையாத
தொகை        -           மறைதல்
தொகைநிலைத் தொடர்
ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையில் வேற்றுமை,  வினை,  உவமை, உம்மை முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’(மறைந்து) வருவது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
நூற்பா:        "பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை
ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்து ஒரு
மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல்”- நன். நூ. 361
தொகைநிலைத்தொடர் வகைகள் (6)
1.   வேற்றுமைத்தொகை
2.   வினைத்தொகை
3.   பண்புத்தொகை
4.   உம்மைத்தொகை
5.   உவமைத்தொகை
6.    அன்மொழித்தொகை
நூற்பா:        "வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை
அன்மொழி என அத்தொகை யாறாகும்" -  நன். நூ.362
வேற்றுமைத்தொகை
ஒரு தொடரில் இரண்டு சொற்களுக்கிடையில் ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய வேற்றுமை உருபுகள் மறைந்து வரும் தொடர் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் எனப்படும்
வேற்றுமை தொகைநிலைத் தொடர் வகைகள்
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. எனவே, இரண்டாம் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமை ஈறாக ஏனைய ஆறு வேற்றுமைகளும் தொகைநிலைத் தொடரில் அமைகின்றன.
உருபு தொக்கு வருதல்
பால் பருகினான் - பால்++பருகினான்  - இரண்டாம் வேற்றுமை தொகைநிலைத்தொடர் கை தொழுதான்  - கை+ஆல்+தொழுதான்- மூன்றாம் வேற்றுமை தொகைநிலைத்தொடர்
கூலி வேலை                  - கூலி+கு+வேலை       -  நான்காம் வேற்றுமை தொகைநிலைத்தொடர்
ஊர் நீங்கினான்  - ஊர்+இன்+நீங்கினான்- ஐந்தாம் வேற்றுமை தொகைநிலைத்தொடர்
முருகன் சட்டை  - முருகன்+அது+ சட்டை- ஆறாம் வேற்றுமை தொகைநிலைத்தொடர்
குகைப்புலி         - குகை + கண்+ புலி       - ஏழாம் வேற்றுமை தொகைநிலைத்தொடர்
உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
வேற்றுமை உருபோடு வேறு ஒரு சொல் மறைந்து வருவது வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
வளநகர்        =          வளத்தை உடைய நகர்
இத்தொடரில் ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபும் ‘உடைய’ என்னும் சொல்லும் மறைந்து வந்துள்ளது.
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மட்கலம்       =          மண்ணால் ஆகிய கலம்
இத்தொடரில் ‘ஆல்’ என்ற மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆகிய’ என்னும் சொல்லும் மறைந்து வந்துள்ளது.
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தமிழ்த்தொண்டு = தமிழுக்குச் செய்யும் தொண்டு
இத்தொடரில் ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபும் ‘செய்யும்’ என்னும் சொல்லும் மறைந்து வந்துள்ளது.
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
அடுப்புப் புகை =     அடுப்பினின்று எழும் புகை
இத்தொடரில் ‘இன்’ என்ற ஐந்தாம் வேற்றுமை உருபும் ‘எழும்’ என்னும் சொல்லும் மறைந்து வந்துள்ளது.
ஆறாம் வேற்றுமை உருபு தொக்க தொகை
தமிழ்த்திறன்           =          தமிழினது திறன்
ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை.
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தமிழ்ப்பற்று            =          தமிழின்கண் தோன்றிய பற்று
இத்தொடரில் ‘கண்’ என்ற ஏழாம் வேற்றுமை உருபும் ‘தோன்றிய’ என்னும் சொல்லும் மறைந்து வந்துள்ளது.
வினைத்தொகை
காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வருவது வினைத்தொகை எனப்படும்.
நூற்பா:       காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – நன். நூ. 364
Ø  இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.
Ø  முதல்சொல் வினை அடிச்சொல் அல்லது வினை வேர்ச்சொல்லாக இருக்கும்.
Ø  இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
விதி: வினைப்பகுதி + பெயர்ச்சொல்
அலைகடல் (அலை)யும் + கடல்)
(அலையும் கடல், அலைகின்ற கடல், அலைந்த கடல்)
பண்புத்தொகை
நிறம், சுவை, வடிவம், அளவு, குணம் ஆகியவற்றை உணர்த்தும் பண்புப்பெயரும் பெயர்ச்சொல்லும் இணைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்
Ø  இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.
Ø  முதல்சொல் பண்பு பெயராகவும் இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்.
Ø  இரண்டு சொற்களுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வரும்.
நூற்பா:       வண்ணத்தின், வடிவின், அளவின், சுவையின், என்று
அன்ன பிறவும் அதன் குணம் நுதலி,
'இன்னது இது' என வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே. (தொல். 2-416)
விதி: பண்புப்பெயர் + பெயர்ச்சொல்

எ.கா:  வெண்சங்கு              =          வெண்மை + சங்கு    –          நிறப் பண்புப்பெயர்.
புளிக்குழம்பு                      =          புளிப்பு + குழம்பு       –         சுவைப் பண்புப்பெயர்.
வட்டத்தொட்டி       =          வட்டம் + தொட்டி    –          வடிவப் பண்புப்பெயர்.
நீள்வானம்             =          நீளம் + வானம்          –          அளவுப் பண்புப்பெயர்.
இன்சொல்               =          இனிமை + சொல்      –          குணப் பண்புப்பெயர்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னுமாக அமைந்து இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்
விதி: சிறப்புப்பெயர் + பொதுப்பெயர்
எ.கா:  தென்னை + மரம்   =          தென்னைமரம்
                        தென்னை     =          சிறப்புப்பெயர்
                        மரம்              =          பொதுப்பெயர்
உவமைத் தொகை
உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம இருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா:  மதிமுகம்       (மதி +போன்ற+முகம்) போன்ற என்னும் உவம
உவம வகை
வினை உவமத் தொகை     புலிக் கொற்றன்     புலி போலும் கொற்றன்
பயன் உவமத்தொகை         மழைக்கை                மழை போலும் கை
மெய் உவமத் தொகை        துடியிடை                 துடி போலும் இடை
உரு உவமத் தொகை           பவளவாய்        பவளம் போலும் வாய்
நூற்பா:       உவம உருபு இலது உவமத் தொகையே - நன். 366
வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே
வகை பெற வந்த உவமத் தோற்றம். (தொல்காப்பியம் 3-272)
உம்மைத்தொகை
இரண்டு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தருவது உம்மைத் தொகை எனப்படும்.
நூற்பா:       எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும் நான்கு அளவையுள் உம் இலது அத்தொகை - நன். 368
எ.கா:  ஒன்றேகால்    - ஒன்றும் காலும்         - எண்ணல் அளவை உம்மைத் தொகை
கழஞ்சு கர்ணம் - கழஞ்சும் கர்ணமும்  - எடுத்தல் அளவை உம்மைத் தொகை
மரக்கால் படி              - மரக்காலும் படியும்  - முகத்தல் அளவை உம்மைத் தொகை
அடி அங்குலம்  - அடியும் அங்குலமும் - நீட்டல் அளவை உம்மைத் தொகை
எண்ணும்மை
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்'  எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.
சேரரும் சோழரும் பாண்டியரும்
அன்பும் அறனும்
கற்பும் காதலும்
காயும் கனியும்
ஆக்கமும் கேடும்
யாயும் ஞாயும்
மேற்கண்ட சொற்களில் உம் எண்ணும் இடைச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதைக் காணலாம்.
சிறப்பு எண்ணும்மை
சொற்களின் பின்  “உடனும்” என வருவது          =          வானுடனும், கடவுளுடனும்
உயர்வு சிறப்பும்மை
சொற்களின் பின்  “னினும்” என வருவது             =          வானினும், ஊனினும், தேனினும்
முற்றும்மை
முற்றுப் பொருளைத் தருவதற்காக வருகின்ற ‘உம்’ முற்றும்மை ஆகும். இது ஒட்டுமொத்தமாக அனைத்தையும்  என்னும் பொருளில் ஆளப்படுகிறது.
எ.கா பாண்டவர் ஐவரும், முப்பழமும், முத்தமிழும், மூவேந்தரும்.
உயர்வு சிறப்பும்மை
ஒன்றின் உயர்வைக் கூறுவதற்காக பயன்படும் ‘உம்’ உயர்வு சிறப்பும்மை எனப்படும்.
எ.கா தேவரினும், அரசனும் விரும்பும், தேனினும், ஊனினும், வானினும்.
இழிவு சிறப்பும்மை
ஒன்றின் இழிந்த தன்மையை விளக்குவதற்கா வருகின்ற ‘உம்’ இழிவு சிறப்பும்மை என்படும்.
எ.கா நாயும் விரும்பாது, பொய்மையும், இழப்பினும், இடுக்கண்படினும், நாயினும்
அன்மொழித்தொகை
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அல்லாத வேறு சில சொற்கள் மறைந்து வந்து பொருள்தருவது அன்மொழித்தொகை எனப்படும்.
எ.கா   சிவப்புச் சட்டை பேசினார்
          முருக்கு மீசை வந்தார்
இத்தொடர்களில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முருக்கு மீசையை உடையவர் வந்தார் என வேற்றுமை முதலாகச் சொல்லப்பட்டவை அல்லாத சொற்கள் அணிந்தவர், உடையவர் எனும் சொற்கள் மறைந்து வந்துள்ளதால் இத்தொடர்களை அன்மொழித்தொகை எனப்படுகிறது.

நூற்பா:       ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி – நன். நூ. 369)
அன்மொழித்தொகை வகைகள்
(புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை)
முனைவர் க. அரிகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
அரசு மேல்நிலைப் பள்ளி,
இரட்டணை – 604 306
விழுப்புரம் மாவட்டம்
9842036899

harigrettanai1977@gmail.com