Saturday, May 29, 2021

தீநுண்மி ஒழிப்போம் (கொரானா கவிதை)

தீநுண்மி ஒழிப்போம்

(மறந்ததால் வந்தது திநுண்மி)

 

பிரபஞ்சம் முழுவ தையும்

       ஆளுகின்ற மனிதர் கூட்டம்

சிறுகிருமி ஒன்றைக் கண்டு

       அஞ்சுகின்ற நிலையைக் கண்டேன்.         01

 

உலகத்துப் பொருளை எல்லாம்

ஆட்டிவைத்த மனிதன் இன்று

பெட்டிக்குள் பாம்பு போல

வீட்டிற்குள் இருக்கக் கண்டேன்                 02

 

இந்தநிலை மாற்றத் திற்கு

       அவனேதான் காரண மென்பேன்.

எந்தநிலை வந்தால் கூட

உண்மையினை உரக்கச் சொல்வேன்    03

 

நாகரிக வாழ்க்கை என்று

       பழமையினை மறந்து விட்டான்

முன்னோர்கள் விட்டுச் சென்ற

       பண்பாட்டை துறந்து விட்டான்                  04

 

அம்மியிலே அரைத்தெ டுத்து

       அருஞ்சாந்து குழம்பி லிட்டு

கும்மென்று வாசம் தந்த

       குழம்புவகை இன்று இல்லை.                     05

 

முகமெல்லாம் மஞ்சள் பூசி

       அம்மன்போல் காட்சி தந்த

சகோதரிகள் காண வில்லை

       மஞ்சள்குணம் நம்மில் இல்லை.                06

 

 

வரகோடு கம்பு சோளம்

       கேழ்வரகை மறந்து விட்டோம்

சீரகமும் கடுகும் சுக்கும்

       சுவைக்காமல் இருந்து விட்டோம்             07

 

உழைப்பின்றி வருவாய் தேடி

       வியர்வைசொட்ட மறந்து விட்டோம்

சுவைக்காக உணவை உண்டு

சொத்தைஉடல் வளர்த்து விட்டோம்.         08

 

இந்தநிலை மாற வேண்டும்

எதிர்ப்புசக்தி பெருக்க வேண்டும்

மந்தநிலை வந்து விட்டால்

       மரணித்தே போக வேண்டும்.                     09

 

 

அஞ்சறைகள் பெட்டி தேடி

       அறுமருந்து அதனுள் சேர்ப்போம்

அஞ்சாமல் வாழ்வ தற்கு

       அறுசுவைகள் உணவாய் உண்போம்.     10

 

வாரத்திற் கிரண்டு நாட்கள்

நல்லெண்ணெய் குளியல் வேண்டும்

வரடத்திற் கிரண்டு நாட்கள்

உடற்கழிவு நீக்க வேண்டும்.                       11

 

கீரைகாய் கனிக ளோடு

       குளிர்ச்சிதரும் பொருட்கள் நீக்கி

மருந்தாக மளிகை உண்டால்

       தீநுண்மி வென்று வாழ்வாய்.                     12