Friday, February 25, 2022

திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ் - முத்தப் பருவம்

முத்தப் பருவம்

 

துருபத மன்னன் ஆணையுடன் யாசரு பயாசர் வேள்வியிலே

சூரிய ஒளியை மிஞ்சுகின்ற கருநிறம் உடைய தோற்றத்தில்

சுருண்ட கரிய கூந்தலையும் தாமரை போன்ற கண்களையும்

கண்டவர் மயங்கும் அழகோடு திருமகள்போன்ற சாயலுடன்

நறுமணம் வீசும் உடலோடு புன்னகை தவழும் சிரிப்போடு

                கிருட்டிணை என்ற பெயரோடு  இரட்டணை என்ற ஊரினிலே

சிறப்புடன் அமைந்த யாகசேனி நெருங்கியே முத்தம் தருகவே

எங்களின் குலத்தைக் காக்கின்ற திரௌபதி முத்தம் தருகவே            41

 

ஆறுகள் ஊரை வளப்படுத்த பசுமை யாக காட்சிதரும்

                மாடுக ளோடு உழைக்கின்ற உழவர் வாழும் பூமியிது

அறுவடை செய்யும் காலத்தில் எறும்பாய் வயலில் உலவிடுவர்

நெல்லினை அறுத்து மலைபோல களத்தில் சேர்த்து வைத்திடுவர்

அறுவடை செய்த சிலநாளில் வயல்கள் மீண்டும் பயிர்துளிர்க்கும்

                ஓய்வுஇல் லாமல் உழவுசெய்யும் உழைக்கும் மக்கள் நிறைந்துள்ள

இரட்டணை உறையும் பாஞ்சாலி நெருங்கியே முத்தம் தருகவே

எங்களின் குலத்தைக் காக்கின்ற திரௌபதி முத்தம் தருகவே            42

 

அறிவு ஒளியை நீயேற்றி அறியா மைஎன்ற நோய்போக்கு

வறுமை என்ற நிலைநீக்கி வருவாய் பெருக்க வழிதேடு

அருகில் உள்ள உறவுகளை அரும ருந்தா கபோற்றிதொழு

                இனிய மொழிகள் பலபேசி இல்லத் தாரை மகிழ்ந்திடசெய்

சிறந்த உணவை தினமுண்டு உடலை ஓம்பி வளர்த்துக்கொள்

நல்ல நூலைக் கற்றுணர்ந்து நல்ல னவற்றை பிறர்க்குணர்த்து

சிறப்பாய் கேட்ட யாகசேனி நெருங்கியே முத்தம் தருகவே

எங்களின் குலத்தைக் காக்கின்ற திரௌப திமுத்தம் தருகவே            43

 

துரோண ரிடத்தில் பணிவுகொண்டு கலைகள் சிறப்பாய் கற்றதனால்

துரோணர் உள்ளம் மகிழ்வுகொண்டு பிரம்மாஸ் திரத்தை அளித்திட்ட

பார்த்தன் மனைவி பாஞ்சாலி நெருங்கி முத்தம் தருகவே

சிறப்பாய் எங்கள் குலம்காக்கும் அம்மா முத்தம் தருகவே                                  44

 

தன்னுடன் பழகும் மனிதருக்கு தன்னுயிர் தரவும் தயங்காதே

பெண்ணுயிர் தன்னை வதைக்கின்ற பேடியைக் கண்டாய் வணங்காதே

மண்ணுயிர் காக்கும் பாஞ்சாலி நெருங்கியே முத்தம் தருகவே

என்குலம் காக்கும் திரௌபதியே நெருங்கியே முத்தம் தருகவே                      45

 

தீயவ ரிடத்தும் தீமைதரும் திறமிலா சொல்லை பேசாதே

தீயவர் உள்ளம் கவர்ந்திழுக்கும் திறமுடை செயல்கள் செய்துவிடு

தீயினில் பிறந்த யாகசேனி நெருங்கியே முத்தம் தருகவே

தீயது போக்கும் திரௌபதியே நெருங்கியே முத்தம் தருகவே                            46

 

நல்லவர் உள்ளம் நடுங்கிடவே உன்னுடை செயலைச் செய்யாதே

நல்லவர் வழியில் நீநடந்து நல்லது செய்து புகழ்பெறுவாய்

நல்லவ ரான பாண்டவர்கள் மனைவியே முத்தம் தருகவே

நல்லது சொல்லும் திரௌபதியே நெருங்கியே முத்தம் தருகவே                       47

 

கற்புடை மகளிர் உள்ளத்தை கலங்கம் செய்யும் பாதகரை

கற்பென நட்பைக் காக்காத தீய உள்ளம் கொண்டவரை

நெருப்பாய் அழிக்கும் பாஞ்சாலி நெருங்கி முத்தம் தருகவே

சிறப்பாய் குலத்தைக் காக்கின்ற அம்மா முத்தம் தருகவே                                48


விருந்தென வந்தார் பசிபோக்கி விரும்பத் தோடு பலகொடுத்து

விரும்பிய வார்த்தை பலபேசி உள்ளம் மகிழச் செய்தவரை

நெருங்கிக் காக்கும் பாஞ்சாலி விரும்பி முத்தம் தருகவே

சிறப்பாய் குலத்தைக் காக்கின்ற அம்மா முத்தம் தருகவே                               49

 

அன்னைத் தந்தை உளம்நோக விட்டி டாத நல்மக்கள்

தன்னைச் சார்ந்த உறவினரைப் போற்றிக் காக்கும் நல்மனங்கள்

என்றும் காக்கும் பாஞ்சாலி நெருங்கி முத்தம் தருகவே

என்னுள் வாழும் யாகசேனி அம்மா முத்தம் தருகவே                                           50