Sunday, November 6, 2022

முத்தமிழ் பல்சந்தமாலை

அன்னைத் தந்த ஒருமொழி
          அன்பு வளர்க்கும் தனிமொழி
பின்னை நாளில் பலமொழி
          தோன்ற வைத்த பெருமொழி
முன்னை மனிதன் நாவினில்
          முதலாய்ப் புகுந்த தீம்மொழி
என்றும் நிலையாய் இருந்திடும்
          எங்கள் மொழியே தமிழ்மொழி          01
 
தமிழ்நில மான நிலப்பரப்பில்
          லெமூரியா என்னும் கண்டத்தில்
அமிழ்தென உதித்த முதல்மாந்தர்
          புலம்பெயர்ந் துலகின் பலதிசைக்கு
அம்பணம் போல பரவியெங்கும்
          அமைவிடம் தேடி அலைந்திட்டு
தமக்கென இடத்தைத் தெரிவுசெய்து
          தமிழுடன் வாழத் தொடங்கினரே          02

வாய்மொழி யாக தாம்செய் 
          தொழிலில் சோம்பல் ஓட்ட
தாய்மொழி யாலே பாடல் 
          பாடிட செவிவாய் உண்டு
சேய்முதல் இறுதி காலம் 
          வரையிலும் இசையால் வாழ்ந்து
காயிதம் இன்றி நல்ல இலக்கியம் 
          படைத்தார் முன்னோர்           03

முன்னோர் ஓலைச் சுவடியிலே 
          எழுதி வைத்த இலக்கியங்கள்
பின்னால் சாமி நாதஐயர் 
          தேடி நூலாய் தந்திட்டார்
அன்னார் செய்த செயலாலே 
          நமது மொழியும் துளிர்த்தெழுந்து
மன்னாப் புகழை பெற்றதுடன் 
          தரணி எங்கும் பரவியதே           04

பரவிபுகழ் தேடி தந்த 
          தொகைபாட்டு நீதி நூல்கள்
அரசபுகழ் பாட்டில் சொல்லும் 
          காப்பியங்கள் பக்தி நூல்கள்
பெருமைமிக தலைவன் தன்னைப் 
          பாடும்சிற் றிலக்கி யங்கள்
கருப்பொருளாய் ஒன்றை வைத்த
          குறுங்காவியம் பலவும் உண்டு           05
 
உலகிலுள்ள படைப்புவகை இங்கு
          இருப்பவரால் உருவாக்கம் பெற்று
பலகால மரபுகளை உடைத்து
          புதுவடிவாய்ப் புதுக்கருவை ஏற்று
சொல்புதிதாய்ப் பொருள்புதிதாய்த் தந்து
          சமுதாயச் சிக்கல்கள் பகரும்
பல்வேறு வட்டார வழக்கு
          படைப்புகளில் மிளிர்வதையும் காணீர்          06

கானாற்று நீரோடை சங்கீதம்
          பாடி கரைபுரண்டு ஓடும்
தேனெடுக்கும் சுறும்பினங்கள் 
          ரீங்கார மிட்டு பூவகைகள் தேடும்
வானத்துக் கருமேகம் இடிமுழக்கம் 
          கொட்டி பெருமழையைத் தூவும்
தான்கூடு கட்டாது இனவிருத்தி 
          செய்யும் குயிலினங்கள் பாடும்         07
 
பாட்டிசைத்து பாடுதற்கு இயற்கைதரும் 
          சந்தங்கள் காதில் வாங்கி
நாட்டுமக்கள் மெட்டுகட்டி அனுபவத்தை 
          உடன்சேர்த்து பாடி வந்தார்
ஏடெடுத்து எழுதிவைத்தோர் ஏழுவகை
          இசையோடிந் தளம்காந் தாரம்
பாடைதாணு குறிஞ்சிஎனப் பண்ணமைத்து
          பாடுமுறை சொல்லி வைத்தார்         08
 
வையத்து மக்கள் கண்டு
          களிக்க ஒன்பான் சுவையை
நயமாய் உடலில் வழியே 
         காட்டும் கூத்தின் கதையை
பொய்யாய் மெய்யாய் கட்டி
         தெருவில் அவையில் ஆட
வியப்பில் உண்மை மாந்தர்
         வந்தார் என்றே நினைப்போம்        09
 
நிகழும் நாடகம் ஒன்று
          நேரில் காண்பது போல
தகவல் தொடர்பினால் நமது
          வீட்டில் காண்பது வளர்ச்சி
தகுந்த சூழலை உணர்த்த
          இசையின் அதிா்வுகள் மாற்றி
மக்கள் சிந்தையைக் கவரும்
          சிறந்த உத்தியும் உண்டு          10