சிற்றிலக்கியங்கள்
தமிழ் இலக்கியங்களைப் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரண்டாகப் பகுப்பதுண்டு. நீண்ட அடிகளை உடைய பாடல்களைப் பேரிலக்கியம் என்றும் குறைந்த அடிகளை உடைய பாடல்களை சிற்றிலக்கியம் என்றும் வகைப்படுத்துவர். மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களைக் கொண்டு அமையும் இலக்கியங்கள் பேரிலக்கியங்கள். அவற்றுள் ஒன்றிரண்டு குறைந்து வருவது சிற்றிலக்கியங்கள் எனக் கொள்வாரும் உளர்.
இச்சிற்றிலக்கியத்திற்குப் பிரபந்தம் என்ற பெயரும் உண்டு. பிரபந்தம் என்ற சொல்லிற்கு “நன்கு கட்டப்பட்டது” என்று பொருள். பிரபந்தம் என்ற சொல்லை முதன் முதலில் கையாண்டவர் நாதமுனி. சிற்றிலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் நூல்கள் பாட்டியல் நூல்கள் ஆகும்.
சிற்றிலக்கிய காலம்
சிற்றிலக்கியத்தின் காலமாக நாயக்கர் காலம் கொள்ளப்படுகிறது. அதாவது, கி.பி. 15ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை சிற்றிலக்கிய காலம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இக்கால கட்டத்தில்தான் சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோற்றம் பெற்றன.
பாடுபொருட்கள்
அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றில் எதேனும் ஒன்றில் சிற்றிலக்கியம் பாடப்படுகிறது.
பாட்டுடைத் தலைவர்கள்
சிற்றிலக்கியத்தின் பாட்டுடைத் தலைவர்களாக, கடவுள், அரசன், வள்ளல், உடல் உறுப்புகள் ஆகியன அமைகின்றன.
சிற்றிலக்கியங்களின் தோற்றம்
சிற்றிலக்கியத்தின் தோற்றம் குறித்து ந. வீ. ஜெயராமன் கூறுகையில், “தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டு, ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாகத் துளிர்த்து, ஏழாம் நூற்றாண்டில் கோவையாகிச் செடியாகி, எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி, ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாகக் கிளைத்து,பதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும், பரணியாகவும் அரும்பி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகி, பதினான்காம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்து, பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாகக் கனிந்தது” என்று குறிப்பிடுகிறார்.
சிற்றிலக்கிய வகைகள்
சிற்றிலக்கியங்கள் 96 என்ற மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீரமா முனிவரின் சதுரகராதியும் பிரபந்த மரபியலும்
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
தொண்ணூற் றாறு என்னும் தொகையதாம் (பி.ம. நூ.1 )
சிற்றிலக்கியங்கள் 96 என்றே வரையறை செய்கின்றன. பன்னிருபாட்டியல், இலக்கணவிளக்கம், பிரபந்ததீபிகை, சுவாமிநாதம் என்பன இலக்கிய வகைகளைச் சுட்டியிருப்பினும் எண்ணிக்கையை வரையறை செய்யவில்லை. அதோபோல் பன்னிருபாட்டியல் முதலானப் பாட்டியல் நூல்கள் கூறும் சிற்றிலக்கியங்கள் ஒன்றையொன்று முரண்பட்டும் வகையில் வேறுபட்டும் பகர்கின்றன. இவற்றை ஒப்பிட்டு நோக்கின் 96 வகைகளையும் தாண்டி பலவகையில் இருப்பதை அறியலாம்.
இலக்கிய வகையும் பாடுபொருளும்
- அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
- அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.
- அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.
- அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.
- அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.
- அலங்கார பஞ்சகம் - -
- ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
- இணைமணி மாலை - -
- இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.
- இரட்டை மணிமாலை - -
- இருபா இருபஃது - -
- உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.
- உலாமடல் - கனவில் பெண் இன்பம்.
- உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
- உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை.
- உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு.
- ஊசல் - வாழ்த்துதல்.
- ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
- ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு.
- ஊரின்னிசை - பாட்டுடைத்தலைவன் ஊர்.
- எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர்.
- எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை.
- ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள்.
- ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா.
- ஒலியல் அந்தாதி - -
- கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
- கடைநிலை -
- கண்படை நிலை -
- கலம்பகம் - 18 உறுப்புகள்.
- காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.
- காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.
- காப்பு மாலை - தெய்வம் காத்தல்.
- குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல்.
- குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல்.
- கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை.
- கைக்கிளை - ஒரு தலைக்காமம்.
- கையறுநிலை - உற்றார் இறந்த பொழுது வருந்துவது.
- சதகம் - (அகம், புறம்) நூறு பாடல் பாடுவது.
- சாதகம் - நாள், மீன் நிலைபற்றிக் கூறுவது.
- சின்னப் பூ - அரசனின் சின்னங்கள் பத்து.
- செருக்கள வஞ்சி - போர்களத்தில் வெற்றி ஆரவாரம், பேய்கள் ஆடல் பாடல்.
- செவியறிவுறுஉ - பெரியோருக்குப் பணிவு, அடக்கம்.
- தசாங்கத்தயல் - அரசனின் பத்து உறுப்பகள்
- தசாங்கப்பத்து -- அரசனின் பத்து உறுப்பகள்
- தண்டக மாலை --
- தாண்டகம் - 27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும்.
- தாரகை மாலை - கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல்.
- தானை மாலை - கொடிப்படை.
- தும்பை மாலை - தும்பை மாலை சூடிப்பொருவது.
- துயிலெடைநிலை - பாசறையில் தூங்கும் மன்னனை எழுப்புதல்.
- தூது - ஆண் - பெண் காதலால் அஃறிணையைத் தூதனுப்புதல்.
- தொகைநிலைச் செய்யுள் - -
- நயனப்பத்து - கண்.
- நவமணி மாலை - -
- நாம மாலை - ஆண்மகனைப் புகழ்தல்.
- நாற்பது - காலம் இடம் பொருள் இவற்றுள் ஒன்று.
- நான்மணி மாலை --
- நூற்றந்தாதி - -
- நொச்சிமாலை - மதில் காத்தல்.
- பதிகம் -ஏதேனும் ஒருபொருள்.
- பதிற்றந்தாதி - -
- பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது.
- பரணி - 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது.
- பல்சந்த மாலை --
- பவனிக்காதல் - உலாவல் காமம் மிக்குப் பிறரிடம் கூறுவது.
- பன்மணி மாலை - கலம்பக உறுப்புகள்.
- பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரை.
- பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) - குழந்தையின் பத்துப்பருவங்கள்.
- புகழ்ச்சி மாலை - மாதர்கள் சிறப்பு.
- புறநிலை - நீ வணங்கும் தெய்வம் நின்னைக் காக்க.
- புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் காக்க.
- பெயர் நேரிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
- பெயர் இன்னிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
- பெருங்காப்பியம் - கடவுள் வணக்கம், வருபொருள், நான்குபொருள் படபாடுதல்.
- பெருமகிழ்ச்சிமாலை - தலைவியின் அழகு, குணம் , சிறப்பு.
- பெருமங்கலம் - பிறந்தநாள் வாழ்த்து.
- போர்க்கெழு வஞ்சி - மாற்றார் மீது போர்தொடுக்கும் எழுச்சி.
- மங்கல வள்ளை - உயர்குலத்துப்பெண்.
- மணிமாலை - -
- முதுகாஞ்சி - இளமை கழிந்தோர் அறிவில் மாக்கட்கு உரைப்பது.
- மும்மணிக்கோவை --
- மும்மணிமாலை - -
- மெய்கீர்த்தி மாலை - அரசனின் கீர்த்தியைச் சொல்லுவது.
- வசந்த மாலை - தென்றல் வருணனை.
- வரலாற்று வஞ்சி - குலமுறை வரலாறு.
- வருக்கக் கோவை --
- வருக்க மாலை --
- வளமடல் - மடலேறுதல்.
- வாகை மாலை - வெற்றி வாகை சூடுதல்.
- வாதோரண மஞ்சரி - யானையை அடக்கும் வீரம்.
- வாயுறை வாழ்த்து - பயன்தரும் சொற்களை அறிவுரையாகக் கூறுவது.
- விருத்த இலக்கணம் - படைக்கருவிகளைப் பாடுவது.
- விளக்கு நிலை - செங்கோல் சிறக்கப்பாடுவது.
- வீர வெட்சி மாலை - ஆநிரை கவர்தல்.
- வெற்றிக் கரந்தை மஞ்சரி - ஆநிரை மீட்டல்.
- வேனில் மாலை - இளவேனில், முது வேனில் வருணனை.
புகழ்பெற்ற சிற்றிலக்கிய வகைகள்
நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் இருந்தாலும் ஒருசில சிற்றிலக்கிய வடிவங்கள் மட்டுமே மிகுதியாகப் படைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு,
1. பிள்ளைத்தமிழ்
2. கலம்பகம்
3. உலா
4. தூது
5. பரணி
6. பள்ளு
7. குறவஞ்சி
8. கோவை
9. சதகம்
10. பதிகம்
11. அந்தாதி
12. மாலை
13. மடல்
எனும் வகைகள் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் புகழ் மிக்கனவாய்த் திகழ்கின்றன.
பிள்ளைத்தமிழ்
பிள்ளைக்கவி எனவும் பிள்ளைப்பாட்டு எனவும் கூறப்படும் பிள்ளைத்தமிழ் இலக்கியம், தான் வழிபடும் இறையையோ வளம்பெறும் வள்ளலையோ குழந்தையாகப் பாவித்துக் குழந்தைப் பருவங்கள் பத்தினைப் பத்துப் பத்துப் பாடல்களால் பாடப்படும் இலக்கியமாகும். இப்பிள்ளைத்தமிழ் குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை