Thursday, November 21, 2024

வாழ்வியல் சதகம்

மா மா காய்

அன்னை தந்தை என்பவர்கள்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்
உன்போல் அவரை எண்ணிடணும்
உரிமை கொண்டு போற்றிடணும்
சின்னச் சின்ன வலிகூட
இல்லா தவரைக் காத்திடணும் 01

அன்னையும் தந்தையும் நம்மைப் படைத்த (உருவாக்கிய) தெய்வங்கள். பிள்ளைகளை காத்து வளர்ப்பதற்காக தன்னையே உருக்கிக் கொண்டவர்கள். உன்னைப் போலவே அவரையும் நினைத்தல் வேண்டும். வயதான காலத்தில் அவர்கள் மீது உரிமைகொண்டு, சின்ன வலிகூட தெரியாமல்  அவர்களைக் காத்திட வேண்டும்.

அன்னை யாரென் றறியாத
உயிர்கள் கூட இருப்பதுண்டு
அன்னை இன்றி உயிரினங்கள்
தானாய் பிறக்க வழியில்லை 
மனித உயிரும் பிறஉயிரும்
மண்ணில் தோன்றி யமாமுனியும்
அன்னைப் பாதம் தொழவேண்டும்
அவளின் அருளைப் பெறவேண்டும். 02

இந்த நில உலகில், அன்னை யார்? என்று அறியாதவர்கள் கூட இருப்பதுண்டு. ஆனால், அன்னை இல்லாமல் யாரும் தானாய் பிறந்திருக்க மாட்டார்கள். மனிதர்களோ? பிற உயிரினங்களோ? முனிவர்களாய்ச் சென்றவர்களோ? யாராக இருந்தாலும் அன்னையின் பாதத்தைத் தொழவேண்டும்.  அன்னையின் அன்பைப் பெறவேண்டும்.

தந்தை உழைப்பிற் கீடாக
எதையும் சொல்ல முடியாது
தந்தை என்போர் பிள்ளைக்காய்
மலையைக் கூட தாங்கிடுவார்
சிந்தை முழுதும் பிள்ளைகளின்
வளர்ச்சி நோக்கி பயணிப்பார்
தந்தை தோற்றம் முள்பழமே
பழமாய் உள்ளம் இருந்திடுமே 03

தந்தையின் உழைப்புக்கு ஈடாக வேறு எதையும் சொல்ல முடியாது. தந்தை என்பவர் பிள்ளைகளுக்காக மலை போன்ற வலியைக் கூட தாங்கிக் கொள்வார். அவரின் சிந்தனைகள் முழுவதும் பிள்ளைகளின் வளர்ச்சி நோக்கியே இருக்கும். கோபத்தைக் காட்டுபவராகவும் பார்ப்பதற்கும் பலாப் பழம்போன்று கரடுமுரடாக இருந்தாலும் அவரின் உள்ளம் பலா பழம் போன்று இனிமையானது.

தாயால் வந்த நம்மொழியை
தரணி முழுதும் பரப்பிடுவோம்
வேயா குடிசை பலன்தருமோ
பேசி அதனை வளர்த்திடுவோம்
தேயும் நிலவும் ஒருநாளில்
முழுமை யாக வளர்ந்துவிடும்
ஓயா நமது செய்கையினால்
மொழியும் வளர்ந்து சிறந்திடுமே 04

தாய் தந்த நம் மொழியை உலகம் முழுதும் பரவச் செய்வோம். வீட்டின் மேல் கூரை வேயப்படவில்லை என்றால் அந்தக் குடிசையால் எந்தப் பயனும் இல்லை. அதுபோல பிறரிடம் நம்மொழியைப் பேசாமல் மொழியும் வளர்வதில்லை. தேய்கின்ற நிலவு கூட ஒருநாள் முழுமை அடையும். அதுபோல மொழி வளர்வதற்கான நம்முடைய ஓயாத செய்கையினால் நமது மொழியும் வளர்ந்து செழிப்படையும்.

கண்ணில் தெரியா மின்சாரம்
கையை வைத்தால் தாக்கிவிடும்
கண்ணில் கல்லாய் தோன்றுகின்ற
கடவுள் சிலையும் அதுவாகும்
கண்ணால் காதால் வாயாலே
கண்டு கேட்டுப் புகழ்வோமே
எண்ணம் செயலாய் நாமிருந்து
தொழுது தினமும் பணிவோமே 05

மின்சாரம் கண்களுக்குத் தெரியாது என்றாலும் தொட்டவுடன் தாக்கத்தை ஏற்படுத்தும். கோவில் கருவறையில் உள்ள கடவுள் சிலையும் அப்படித்தான் பார்ப்பதற்குக் கல்லாக தெரிந்தாலும் அதன் சக்தி அளவற்றது. அத்தெய்வத்தை கண்ணால் காண்போம். காதால் கேட்போம். வாயால் புகழ்வோம். சிந்தனையும் செயலையும் இறைவன்பால் வைத்து தினமும் பணிந்து வணங்கிடுவோம்.

வெளிச்சம் இல்லா கருவிழிகள்
பொருளைக் காண உதவிடுமோ?
விளையா நிலத்தில் விதைத்தூவ
விளைச்சல் தந்து செழித்திடுமோ?
பிள்ளை மீது அக்கரைகள்
கொள்ளா பெற்றோர் இருக்கையிலே
பிள்ளை வாழ்வு சிறந்திடுமோ?
மதிப்பு செல்வம் வந்திடுமோ? 06

வெளிச்சம் இல்லாத இடத்தில் கருவிழிகளால் பொருட்களைக் காண இயலாது. விளையாத நிலத்தில் நல்ல விதைகளையே விதைத்தாலும் விளைச்சல் தந்து செழிக்காது. அதுபோல பிள்ளைகள் மீது பெற்றவருக்கு அக்கரை இல்லாத வரையில் அவர் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பத்தில்லை. மதிப்பு மரியாதை செல்வம் எதுவும் கிடைப்பத்தில்லை.

காற்று வீசும் திசைநோக்கி
மெல்ல மெல்ல பறந்தாலும்
காற்றின் வேகம் மிகக்கடந்து
பயணம் எளிதாய் அமைந்திடுமே.
காற்றை எதிர்த்து கடும்பயணம்
செய்தால் வெற்றி கிடைக்காது.
காற்றாய் இருப்போர் பணிவுகொண்டு
வெற்றிக் கனியைப் பறித்திடுவீர் 07

காற்று வீசும் திசையில் கடினமில்லாமல் பறந்தாலும் காற்றைவிட இருமடங்கு வேகத்தில் சென்று இலக்கை அடையலாம். காற்றை எதிர்த்து கடுமையாகப் போராடினாலும் வெற்றி நமக்குக் கிடைக்காது. காற்றுபோல இருக்கும் அதிகாரத்தில் இருப்பவரிடம் பணிந்து தன் செயல்களை முடித்துக் கொள்ள வேண்டும்.

கண்கள் இலாத எறும்புஅதன்
கால மெல்லாம் உழைக்கிறது
கண்கள் இருந்தும் நாமெல்லாம்
சோம்ப லோடு வாழ்கின்றோம்
கண்க ளோடு ஐம்பொறிகள்
அழகாய் படைத்தான் நம்மிறைவன்
கண்டு கேட்டு வாழ்வுதனை
களிப்பாய் வாழ்ந்து கழிப்போமே 08

கண்ணில்லாத எறும்புகள் அதன் வாழ்நாள் முழுவதும் உழைத்து வாழ்கிறது. கண்கள் இருந்தும் நாம் எல்லாம் சோம்பலோடு வாழ்கின்றோம். இறைவன் நமக்கு, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் குறையில்லாமல்  படைத்திருக்கிறான். தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என வாழ்க்கையை இன்பமாய் வாழ்ந்து வாழ்நாளைக் கழிப்போம்.

வேப்பம் பூவின் தேன்துளிகள்
கண்க ளுக்குத் தெரியாது;
வேப்பம் பூவாய் அறிவுரைகள்
ஏற்றால் துன்பம் இருக்காது;
பாம்பின் நஞ்சை இறக்கிவிடும்
நோயைப் போக்கி துடிப்பூட்டும்
வேம்பை நட்டு புவியெங்கும்
வெப்பம் தணித்து வாழ்வோமே 09

வேப்பம் பூவில் உள்ள தேன் துளிகள் கண்களுக்குத் தெரியாது. அதுபோல, பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் கசப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டால் துன்பம் இருக்காது. வேப்பமரத்தின் இலைகள், பாம்பின் நஞ்சினைக் கூடப் போக்கும் தன்மை உடையது. அந்த வேப்ப மரத்தினை பூமி எங்கும் நட்டு வெப்பத்தினைப் போக்கி வாழ்வோம்.

நட்பைப் புரிந்து கொண்டவர்க்கு
நாளும் குறைகள் கிடையாது
நட்பாய் பழகும் பகைவருக்கு
நட்பின் அருமை தெரியாது
நட்பே உலக மானிடரை
நயமாய் கட்டி ஒன்றிணைக்கும்
நட்பு கொள்ளா மனிதர்கள்
நிலத்தில் இருக்க வாய்ப்பில்லை. 10

நட்பினைப் புரிந்து கொண்டவர்களுக்கு எந்த நாளிலும் குறைகள் இருக்காது.  நட்பு என்னும் பேரில் பழகும் பகைவருக்கு நட்பின் அருமை புரியாது. உலகில் உள்ள மனிதர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் கயிறு நட்பு. எந்த மனிதனும் நட்பு கொள்ளாமல் வாழமுடியாது.

சின்னச் சின்ன ஆசைகளை
குறைத்து வாழ்வில் முன்னேறு
தன்னை உயர்த்த வேண்டுமெனில்
திறமை முழுதும் வெளிக்காட்டு
தனிமை விரும்பிப் போகாமல்
உறவில் மூழ்கி துணைதேடு
உன்னும் சோறு எதுவென்று
அறிந்து உண்டால் நலம்தருமே 11

விளம் மா தேமா

அடுக்களைப் பெண்கள் எல்லாம் 
அரியணை ஏறி விட்டார் 
துடிப்புடன் எல்லாத் திக்கும் 
துணிந்தவர் வென்று வந்தார் 
தடைகளும் அவர்க்கு இல்லை 
தடுத்திட எவரு மில்லை 
விடைகொடு வானம் ஏறி 
விண்மலர் பறித்துச் சூட  

பிறர்மனம் நோகா வண்ணம்
பேசிநீ பழக வேண்டும்
பிறர்செயல் குறைசொல் லாமல்
உன்செயல் திருத்த வேண்டும்
பெற்றவர் சொல்லைக் கோட்டு
பெருமைகள் சேர்க்க வேண்டும்
கற்றிடும் கல்வி உந்தன்
வாழ்வினை உயர்த்த வேண்டும்

தலைமுடி நரைத்த பின்னும் 
உடல்தசை இழைத்த பெண்ணும் 
மலைபொருள் கரைந்த பின்னும் 
உறவுகள் வெறுத்த பின்னும் 
பலவித சோகம் வந்து
இருவரை துவைத்த பின்னும் 
இளமையின் காதல் போல 
முதுமையில் இருத்தல் நன்றே

மரம்செடி கொடிகள் எல்லாம்
கனியுடன் விதையை வைத்து
பரம்பரைப் பெருக்கம் செய்ய
பிறர்உணக் கொடுத்து நிற்கும்
வரமென மரங்கள் நட்டால்
பெருமழை வாசல் தட்டும்
பரம்பரை வாழ்வ தற்கு
கடமையாய்ச் செய்து வாழ்வோம்

விளம் மா காய்

காலையில் எழுந்து கல்வியினை
கற்றிட நினைவில் நின்றிடுமே
மாலையில் ஓடி விளையாடு
உடல்மனம் உறுதி ஆக்கிடுமே
சாலையில் நடந்து செல்கையிலே
விதிமுறைப் படியே நடந்திடுவாய்
பாலென ஒழுக்க மாயிருந்து
யாவரும் போற்ற வாழ்ந்திடுவாய்



மா மா மா

பண்டம் மாற்று முறையை 
மீண்டும் கொண்டு வந்தால் 
அண்டம் முழுதும் உள்ள 
உழவன் கைகள் ஓங்கும் 
மண்ணைக் கீரி விதைகள் 
தூவும் அவனின் செயல்கள்
மண்ணின் உயிரைக் காத்தும்
உலகின் பசியைப் போக்கும் 



மா மா மா மா மா மா  விளம்

சோறு போடும் நிலத்தை விற்று 
சோறு வாங்கி உண்கிறீர்
சோறு போடும் மக்கட் கூட்ட 
உள்ளம் நொந்து வேகுது
சோறு தண்ணீர் வளம்கு றைய்ய 
எதனை உண்டு வாழுவீர்
சோறு போடும் தொழிலைச் செய்து
 நிலமை மீண்டும் மாற்றுவோம்

மா மா மா மா


சண்டை இல்லா உலகம் வேண்டும் 
நட்பாய் உறவாய் பழக வேண்டும் 
கொண்ட செயலில் உறுதி வேண்டும் 
கொடுத்த வாக்கை காக்க வேண்டும் 
பண்டை மரபு பேண வேண்டும் 
பள்ளி சென்று கற்க வேண்டும்
பண்பா டறிந்து பழக வேண்டும் 
பாவச் செயலை ஒதுக்க வேண்டும்

பணமே குறிக்கோள் என்றி ருந்தால்
உறவும் நட்பும் பிரிந்து ஓடும்
பணமே வாழ்க்கை என்ப தல்ல
பணமும் வாழ்வின் அங்க மாகும்
பணத்தைத் தேடி ஓடி டாமல்
அதுஉன் கரத்தில் வரவே உழைப்பீர்
பணிவும் கனிவும் இருந்தால் போதும்
குறைவில் லாத வாழ்வு அமையும்

பெண்கள் பணிந்தால் உறவு வளரும்
ஆண்கள் பணிந்தால் குடும்பம் உயரும்
கண்கள் இருண்டால் காட்சி மறையும்
கடமை மறந்தால் பலன்கள் குறையும்
எண்ணம் சிறந்தால் செல்வம் பெருகும்
வான வில்லாய் வாழ்க்கை ஒளிரும்




அன்னையும் தந்தையும் ன்னை
கண்ணென காத்திடு வாரே

வேலுடன் நிற்கும் வீரனைப்போல்
கடமையைச் செய்து பணியாற்று